ஏகாதசியில் விண்கலம் அனுப்பியதால் அமெரிக்காவுக்கு வெற்றி.. சொல்வது மாஜி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்
Recommended Video
புனே: ஏகாதசி நாளில் நிலவுக்கு அமெரிக்கா விண்கலம் அனுப்பியதால் வெற்றி கிடைத்தது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் பிரமுகர் சாம்பாஜி பிதே.
இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரை மீண்டும் இயக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் பிரமுகரான சாம்பாஜி பிதே சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். தற்போது மகராஷ்டிராவில் சிவ பிரதிஸ்த்ஆன் ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவராக உள்ள சாம்பாஜி பிதே கூறியுள்ள கருத்து:
அமெரிக்கா நிலவுக்கு விண்கலனை அனுப்ப 38 முறை முயன்று தோற்றது. இதையடுத்து அமெரிக்காவின் விஞ்ஞானிகளில் ஒருவர் இந்திய நேரமுறையை பின்பற்றி நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.
விண்ணில் ஏது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினை?.. இஸ்ரோவை பாராட்டிய பாக். விண்வெளி வீராங்கனை
இதனடிப்படையில் ஏகாதசி நாளன்று அமெரிக்காவின் விண்கலம் 39-வது முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த முயற்சியும் வெற்றியைப் பெற்றது. இவ்வாறு சாம்பாஜி பிதே கூறியுள்ளார்.
ஏற்கனவே தமது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டால் ஆண்குழந்தைகள் பிறக்கும் என கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியவர் இதே சாம்பாஜிதான். அதேபோல் 2018-ல் கோரிகான் பீமாவில் வன்முறையை தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாம்பாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.