அவசரகதியில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு.... உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் கங்குலி
கொல்கத்தா: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குரு அவசரகதியில் தூக்கிலிடப்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அப்சல் குரு, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்; நாடாளுமன்ற தாக்குதல் சதியில் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதும் 'தேசத்தின் கூட்டு மனசாட்சி' அடிப்படையில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். அவரது உடலும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அப்சல் குருவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அண்மையில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்த்தி நடத்தப் போய் பெரும் களேபரம் வெடித்தது. அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சதியில் அப்சல் குருவுக்கு தொடர்பிருக்கிறதா? என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். அத்துடன் அப்படியே தொடர்பிருந்தாலும் சாகும்வரை வாழ்நாள் சிறைத் தண்டனைதான் விதித்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான அசோக் கங்குலி, அப்சல் குருவுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அசோக் கங்குலி பேசியதாவது:
அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது? என்பதை ஒரு முன்னாள் நீதிபதியாக நான் கூறுகிறேன். பிப்ரவரி 3-ந் தேதி அப்சல் குரு கருணை மனு நிராகரிக்கப்படுகிறது. பின்னர் 6 நாட்களில் அதாவது 9-ந் தேதி தூக்கிலிடப்படுகிறார்...
இது தவறு. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்காட அப்சல் குருவுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அசோக் கங்குலி கூறினார்.