ஆதாருக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம்... நந்தன் நிலகேணி குற்றச்சாட்டு!
ஆதார் தகவல் திருடப்பட்டதாக திட்டமிட்டே ஆதாருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஆதார் யூஐடிஏஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு : ஆதார் தகவல் திருடப்பட்டதாக திட்டமிட்டே பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஆதார் யூஐடிஏஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி குற்றம்சாட்டியுள்ளார்.
100 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் திருடப்பட்டதாக டெல்லயில் யூஐடிஏஐ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தித் தாளில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர் தன்னை வியாபாரி போல காட்டிக் கொண்டு வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆதார் விவரங்களை எடுப்பதற்கான அனுமதி பெற்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆதார் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை இந்த சம்பவம் எழுப்பியது.
எளிதில் திருட முடியாது
இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யூஐடிஊஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி, ஆதார் விவரங்கள் பல பாதுகாப்பு அம்சங்களைக் கடந்து தான் சேகரித்து வைக்கப்படுகின்றன, அதனை அவ்வளவு எளிதில் திருடிவிட முடியாது.
ஆதாரை ஏற்க வேண்டும்
ஆதார் உண்மையிலேயே நல்ல முயற்சி இது பற்றி அவதூறான கருத்துகளே தொடர்ந்து பரப்பப்படுகிறது. எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் எதிர் விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அனைவரும் ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று நந்தன் நிலகேணி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றமும் ஏற்கும்
நாட்டில் சுமார் 119 கோடி மக்கள் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர், 55 கோடி மக்கள் தங்களது ஆதார் கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளனர். உச்சநீதிமன்றம் ஆதாரில் தனி மனித விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதை ஏற்கும் என நம்புவதாக நிலகேணி தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணை பகிர வேண்டாம்
தற்போது ஆதார் அட்டைக்கென வெர்ச்சுவல் ஐடி என்ற ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இனி மக்கள் தங்கள் ஆதார் எண்ணை எங்கும் தெரிவிக்க வேண்டியதில்லை, வெர்ச்சுவல் ஐடி நம்பரை மட்டும் கூறினால் போதும் இதனால் ஆதார் விவரங்களுக்கான பாதுகாப்பு மேலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று நந்தன் நிலகேணி கூறியுள்ளார்.