4 மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு ஆப்பு... மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள்!
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் மணிப்பூரை தவிர்த்து 4 மாநிலங்களில் ஆளும் கட்சியினர் ஆட்சியை இழந்துள்ளனர்.
டெல்லி: மணிப்பூரை தவிர்த்து ஏனைய 4 மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் உள்ள ஆளும் கட்சி ஆட்சியை இழக்கிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாட்டின் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஆட்சியில் உள்ள சமாஜவாதி கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது. இந்த மாநிலத்தை பொருத்தவரை அகிலேஷின் சமாஜவாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.
100-ஐ தொடவில்லை காங்கிரஸ்
இந்நிலையில் அந்த மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வெற்றுள்ளது பாஜக. ஆனால் சமாஜவாதி- காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதிகளைக் கூட தொடவில்லை.
கோவாவில் காங்கிரஸ் முன்னிலை
கோவாவை பொருத்தவரை ஆளும் கட்சியான பாஜக தோல்வி அடைந்துள்ளது. கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். கோவா 40 தொகுதிகளை கொண்டது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
முதல்முறையாக பஞ்சாபில்....
பஞ்சாபில் சிரோண்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி ஆளும் கட்சியாக உள்ளது. அதே நேரத்தில், டெல்லியை தாண்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டது. அதே போல் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் 76 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் பாஜக வெற்றி
உத்தரகண்ட்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இங்கும் ஆளும் கட்சிக்கு ஆட்சி இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இங்கு இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஹரீஷ் ராவத் தோல்வி அடைந்தார்.
மணிப்பூரில் இழுபறி
மணிப்பூரில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் அங்கு தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புகள் உள்ளது. மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மணிப்பூரில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பொதுமக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.