பியூன் தவிர அனைத்து அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்க: மத்திய அரசு
டெல்லி: கடைநிலை ஊழியரான பியூன் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பியூன்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அளிப்பதற்கான படிவத்தில், தங்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள், விமானம், படகுகள் அல்லது கப்பல்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், தங்க கட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் தனி பத்தி உள்ளது.
அதேபோல், ரொக்கப்பணம் தொடர்பான விவரங்கள், வங்கி வைப்புத்தொகை, பத்திரங்கள், கடனீட்டு பத்திரங்கள், கம்பெனிகள் மற்றும் பரஸ்பர நிதியங்களில் உள்ள பங்குகள் மற்றும் அலகுகள், காப்பீட்டு பாலிசிகள், வருங்கால வைப்பு நிதி மற்றும் தனிநபர் கடன்கள் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.