காவிரி நீர் பிடிப்பில் கன மழை.. கபினியில் இருந்து 2வது நாளாக 35,000 கன அடி நீர் திறப்பு
பெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தொடர்ந்து 2வது நாளாக வினாடிக்கு, 35,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கபினி அணைக்கு வரும் நீர் வரத்து பிற அணைகளை காட்டிலும் மிக அதிகம்.
எனவே, அதிகப்படியான நீரை கர்நாடகா கபினியில் இருந்து திறந்துவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கன அடி நீரை கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திறந்து விட்டிருந்தது. ஆனால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகப்படியாக வந்தபடி உள்ளதால், நேற்று வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இன்றும்கூட தொடர்ந்து 2வது நாளாக வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்துவிட்டது. அடுத்ததாக அந்த நீர் மேட்டூர் அணையில் சேகரிக்கப்படும்.
இதனிடையே, கபினி அணையில், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு அம்மாநில முதல்வர் குமாரசாமிக்கு போனில், கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி தண்ணீர் திறக்கப்பட்டதற்கெல்லாம் நன்றியா, குமாரசாமிக்கு நன்றி தேவையில்லை, மழையை பெய்ய வைத்த ஸ்ரீரங்கநாதருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.