மக்கள் கொதிப்பு எதிரொலி.. இனி ரூ 4500 வரை பணம் மாற்றலாம், ஏடிஎம்களில் ரூ.2500 எடுக்கலாம் - அரசு
மக்கள் பெரும் அவதியைச் சந்தித்து வருவதால் ஏடிஎம் மூலம் எடுக்கப்படும் பணத்தின் அளவை ரூ. 2500 ஆக மத்திய அரசு கூட்டியுள்ளது.
டெல்லி: ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். மக்களின் கொந்தளிப்பு மத்திய அரசை நோக்கியும், வங்கிகளை நோக்கியும் திரும்பி வருகிறது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 உயர்த்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் இன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், வங்கிக் கிளைகளிலும் கால் கடுக்க நின்று அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின் சுருக்கமான விவரம்:
ஏடிஎம் மையங்கள் மூலம் ஒரு நபர் ஒரு நாளைக்கு இனி ரூ. 2500 வரை எடுக்கலாம் (தற்போது அது ரூ. 2000 ஆக உள்ளது)
காசோலை மூலமாக ரூ. 10,000 வரை எடுக்கலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வாரத்திற்கு இனி ரூ. 24,000 வரை எடுக்கலாம் (தற்போது அது ரூ. 20,000 ஆக உள்ளது).
வங்கிக் கிளைகளில் தனி நபர்களுக்கு ரூ. 4000 வரை பழைய பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டு அது ரூ. 4500 ஆக உயர்த்தப்படுகிறது.
இதேபோல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் செக் மூலமாகவோ அல்லது ஆன்லைன் டிரான்சாக்ஷன் மூலமாகவே கட்டணம் செலுத்துவதை ஏற்காவிட்டால் மாவட்ட கலெக்டர்களிடம் புகார் தரலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.