Exclusive: காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு பாகிஸ்தானின் 'சம்பளம்' ரூ.45 லட்சம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் இளைஞர்களை வாக்களிக்க விடாமல் பிரச்சாரம் செய்வதற்காக அம்மாநில பிரிவினைவாதி தலைவர் யாசின் மாலிக்கிற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கட்டளை பிறப்பித்துள்ள ரகசிய தகவல் அம்பலமாகியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கில், பிரிவினைவாதிகள் செயல்படுகிறார்கள். அதில் முக்கியமானவர் யாசின் மாலிக். இந்தியாவுக்கும், இந்திய ராணுவத்துக்கும் எதிரான கருத்துக்களை காஷ்மீர் மக்களிடையே பரப்பிவருகிறார் இவர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களித்தால், அம்மக்கள் இந்திய ஜனநாயகத்தோடு இயைந்து போகிறவர்கள் என்ற எண்ணம் உலக நாடுகளுக்கு ஏற்படும். இதை தடுக்க தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை குறைத்து, இந்தியாவுடன் வாழ காஷ்மீரிகள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க ஐஎஸ்ஐ அமைப்பு விரும்புகிறது.
தங்களது கெட்ட நோக்கத்திற்கான தூதுவராக யாசின் மாலிக்கை நியமித்துள்ளது ஐஎஸ்ஐ. இதற்காக ஐஎஸ்ஐ அமைப்பின் ரிமோட் கன்ட்ரோலாக செயல்படும், ஹபீஸ் சையது மூலமாக யாசின் மாலிக்கிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளன. யாசின் மாலிக்கின் தொலைபேசி பேச்சை இடை மறித்து கேட்ட இந்திய உளவுத்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் உளவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் ஹபீஸ் சையது இன்னும் வசிக்கிறார். அவர்தான் யாசின் மாலிக்கை தொடர்பு கொண்டு சதி திட்டங்களை செயல்படுத்த கட்டளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் பதிவான தொலைபேசி உரையாடலில், காஷ்மீர் தேர்தலை எப்படியாவது சீர் குலைத்து விட வேண்டும் என்று யாசின் மாலிக்கிற்கு கட்டளை வந்தது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க வேண்டும், வாக்குப்பதிவு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்பது யாசின் மாலிக்கிற்கு தரப்பட்டுள்ள அசைன்மெண்ட்.
இந்திய அரசு உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை, காஷ்மீரிகளுக்கு எதிராக இந்திய ராணும் கொடுமைகளை இழைக்கிறது என்பது போல தொடர்ந்து சொல்லி, இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்ய வேண்டும் என்று யாசின் மாலிக்கிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளையை சிறப்பாக செய்து முடித்தால் உரிய பரிசுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தலை சீர்குலைக்க எங்களிடம் 300 பேர்கள் தயாராக உள்ளனர். இருப்பினும் இந்தியாவிற்குள் ஊடுருவ இப்போது கடினமாக உள்ளது. பிரச்சினை உள்ளிருந்தே வெடிக்க வேண்டும். அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹபீஸ் சையது, யாசின் மாலிக்கிடம் கூறியுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாதா மாதம், யாசின் மாலிக்கிற்கு ரூ.45 லட்சத்தை 'சம்பளமாக' ஐஎஸ்ஐ கொடுத்து வரும் தகவலையும் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த பணம், நேபாள நாடு வழியாக யாசின் கைகளுக்கு வந்து சேருகிறது. ரூ.20 லட்சம் மற்றும் 20 லட்சம் ரூபாய் என்று இரு தவணைகளாக மாதந்தோறும் அப்பணம் யாசினை சென்றடைகிறது. மிகப்பெரிய பங்களாக்கள், பண்ணை நிலங்களை காஷ்மீரில் வாங்கி குவித்துக் கொண்டுள்ளார் யாசின் மாலிக் என்கிறது உளவுத்துறை.