நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறவே நட்டாவுடன் ஆலோசனை.. நல்லதே நடக்கும்: தம்பிதுரை நம்பிக்கை
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறுவது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மத்திய அரசிடம் ஆலோசனை நடத்துவதற்காகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றார்.
அங்கு மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரை சந்தித்தப் பேசிய பின்னர், விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தம்பிதுரை பேசியதாவது:
நிரந்தர விலக்கு
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவே தமிழக அரசு பாடுபட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயற்சித்து வருகிறோம். மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கேட்கவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டே ஆலோசித்து வருகிறோம்.
நல்லதே நடக்கும்
இதனை மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அதனால்தான் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்து வருவதால் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தம்பிதுரை கூறினார்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் பேசியதாவது: மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்படும். அதன்பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
சட்ட சிக்கல் இல்லாமல்..
இதற்கிடையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற 3 முறை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம். நீட் தொடர்பான மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்ட நிலையில், சட்ட சிக்கல் இல்லாமல் தமிழகத்திற்கு மட்டும் எப்படி விலக்கு அளிப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று விஜயபாஸ்கர் கூறினார்.