உ.பி. எக்ஸிட் போல்: அப்பா - மகன் சண்டையால் சமாஜ்வாடி ஆட்சி காலி.. பாஜக வெல்கிறது!
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்குமாம்.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என்கிறது டைம்ஸ் டிவி சேனல் வெளியிட்ட விஎம்ஆர் எக்ஸிட் போல் முடிவுகள். இம்மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளதாம்.
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சி மிக கடுமையான உட்கட்சி குழப்பத்தை எதிர்கொண்டது. தேர்தலின் போது புதிய திருப்பமாக சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன.
இம்மாநிலத்தில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என தீவிரம் காட்டி வந்தது பாஜக. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 11-ந் தேதி முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (எக்ஸிட் போல்) நடத்தப்பட்டது. விஎம்ஆர் நிறுவனம் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது.
இதில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கிறதாம். பாஜக நினைத்தபடியே அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறதாம்.
ஆளும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 இடங்கள்தான் கிடைக்குமாம். பாஜகவுக்கு 190 முதல் 210 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 57 முதல் 74 இடங்கள் வரை கிடைக்குமாம்.
தொங்கு சட்டசபை
ஆனால் சி வோட்டர்- இண்டியா டிவி கருத்து கணிப்பில் உத்தரப்பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜக கூட்டணி 185; சமாஜ்வாதி- காங். கூட்டணி 120; பகுஜன் சமாஜ் 90 இடங்களைக் கைப்பற்றும்.