ஹிமாச்சலில் தாமரையே மலரும்... இந்தியா டுடே எக்ஸிட் போல்
ஹிமாச்சலில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்று இந்தியா டுடே செய்தி நிறுவனம் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்று இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிகிறது.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்று அதன் பதவிகாலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
சுமார் 68 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து
தற்போது ஹிமாச்சலில் முதல்வராக உள்ள வீரபத்ர சிங் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்கு உள்ளது. இதில் அவரது மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் வாக்கு சேகரித்து வந்தது.
தேர்தல் வாக்குறுதிகள்
ஜிஎஸ்டி அமல்படுத்தியது, மக்களவைத் தேர்தலின் போது நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
எக்ஸிட் போல்ஸ்
இந்நிலையில் பல்வேறு செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஹிமாச்சலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் 47 முதல் 55 தொகுதிகளை பெறும் என்றும் கணித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் 13 தொகுதிகளிலிருந்து 20 தொகுதிகள் வரையே வெற்றி பெறும் என்று முடிவுகள் கூறுகின்றன.
அன்று தெரியும்
தேர்தல் முடிவுகள் வரும் 18-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினம்தான் இந்த எக்ஸிட் போல்ஸில் எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள் பலிக்குமா என்பது தெரியும்.