ஹிமாச்சலில் மீண்டும் மலரும் பாஜகவின் தாமரை... பலத்த அடி வாங்கும் காங். - எக்ஸிட் போல் அதிரடி
ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு பாஜகவின் தாமரை மலரும் என்று அணைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் தெரிவிக்கின்றன.
Recommended Video
மும்பை: ஹிமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிக்கனியை ருசிக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக்கட்டிலில் அமரும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கும் நவம்பர் 9ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
வரும் 18ம் தேதி குஜராத் தேர்தல் முடிவுகளின்போது, ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.
இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் நடுவேதான் நேரடி போட்டி நிலவுகிறது. 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலில் 35 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கலாம்.
பாஜக கொடி பறக்கும்
டைம்ஸ் ஆப் இந்தியா- சிவோட்டர் எக்ஸிட் போல் இன்று வெளியாகியுள்ளது. இதன்படி, பாஜக-41 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் எக்ஸிட் போல்
ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று இந்தியாடுடே எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. பாஜக 47 முதல் 55 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி 13 முதல் 20 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 2 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணித்துள்ளது.
வீட்டுக்குப் போகும் காங்கிரஸ்
சாணக்யா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள பாஜக 55 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சி மொத்தமே 13 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் கணித்துள்ளது. இதில் இரண்டு கட்சிகளுக்குமே 7 இடங்கள் வரை கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
சஹாராவின் கணிப்பு
சஹாரா டிவியின் கணிப்பின் படி ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜகவிற்கு 46 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்து பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சி ஆட்சி பறிபோவதால் அக்கட்சி தொண்டர்கள் வருத்தமடைந்துள்ளனர்.