காங்கிரஸ் வளர்கிறது.. பாஜக தேய்கிறது.. 5 மாநில எக்சிட் போல் முடிவுகள் இதுதான்!
Recommended Video
சென்னை: நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியும், மிசோராமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தின.
செமி பைனல்
எனவே இந்த தேர்தல் முடிவுகள் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு அக்னிப் பரிட்ச்சை போல சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக இன்னும் 6 மாதங்களுக்குள் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் பாஜகவிற்கு இது செமி பைனல் போட்டி என்று வர்ணிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முன்னணி டிவி சேனல்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்களுடன் இணைந்து எடுத்த எக்ஸிட் போல் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் வளர்கிறது
இந்தியா டுடே, டைம்ஸ்-நௌ டிவி சேனல், நியூஸ் எக்ஸ் சேனல் உள்ளிட்ட பல டிவி சேனல்கள் இதில் அடஹ்கும். கருத்துக்கணிப்பின் முடிவில் இவை அனைத்தையும் பகுத்துப் பார்த்தால், அதில் காங்கிரஸ் வளர்கிறது, பாஜக தேய்கிறது என்று தெரிய வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வரப் போவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. 90% கருத்துக்கணிப்புகள் இதையே உறுதியாகக் கூறுகின்றன.
ராஜஸ்தான் நிலவரம்
ராஜஸ்தானை பொறுத்தளவில் 70 சதவீதத்திற்கும் மேலான கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் தான், ஆட்சியை கைப்பற்ற போகிறது என்று தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகளில் பலவும், காங்கிரஸ் மிக அதிக தொகுதிகள் வித்தியாசத்தில் அந்த மாநிலத்தை கைப்பற்றப் போவதாக அறுதியிட்டுக் கூறுகின்றன. ஆளும் பாஜகவிற்கு இது, மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
சட்டீஸ்கர் நிலவரம்
சட்டீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ராமன் சிங் தலைமையிலான பாஜக முயன்றது. ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்தளவில் அங்கு காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது தெரியவருகிறது. சட்டீஸ்கரில் 60% கருத்து கணிப்புகள் பாஜக வெல்லும் என்று கூறினாலும், 40 விழுக்காடு கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெல்லும் என்று தெரிவிக்கின்றன. அசைக்கவே முடியாத ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட பாஜக ஆட்சியை, காங்கிரஸ் அசைத்து பார்க்கிறது என்றே தெரிகிறது.
மத்திய பிரதேசம், மிசோராம்
மத்திய பிரதேசம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாநிலம். இங்கும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 60 சதவீத கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற போவதாக கூறுகின்றன. 40 விழுக்காடு கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதா ஆட்சியே தொடரும் என்று கூறுகின்றன. முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடிக்கு ஈடாக கடந்த லோக்சபா தேர்தலின்போது முன்னிறுத்தப்பட்ட பெரிய தலைவர். ஆனால் மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற போவதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகும். மிசோராமை பொறுத்தளவில் அங்கு பாரதிய ஜனதா கட்சியால் எந்த தொகுதியும் வெல்ல முடியாது என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இதையெல்லாம் வைத்து பார்த்தால், லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.