எக்ஸிட் போல்கள் நல்ல டைம்ஸ் பாஸ்: உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நல்ல பொழுதுபோக்கு என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முடிந்தது. இதையடுத்து மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வெள்ளிக்கிழமை வெளிவரும் எக்ஸிட் போல் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் மற்றவை எல்லாம் நல்ல டைம் பாஸ். ஒரு சேனல் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வெறும் 2 இடங்கள் அளித்துள்ளது மற்றொரு சேனல் 14 இடங்கள் அளித்துள்ளது. இந்த சேனல்கள் ஒரே தேர்தல் பற்றி தானே பேசுகின்றன? என்று அவர் தெரிவித்துள்ளார்.