விமானத்தில் பணிப்பெண்ணிடம் எம்.பி. பப்பு யாதவ் ஏக ரகளை- செருப்பால அடிப்பேன் என ரவுடித்தனம்!!
டெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட எம்.பி. பப்பு யாதவ் விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதுடன் செருப்பால் அடிப்பேன் என ரவுடித்தனம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்த மே மாதம் பப்பு யாதவை கட்சியில் இருந்து நீக்கினார் லாலு. இதனைத் தொடர்ந்து அண்மைக்காலமாக பாரதிய ஜனதாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் பப்பு யாதவ்.
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பப்பு யாதவ் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது தான் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த உணவுப்பொருட்களை நடைபாதையில் வீசியுள்ளார் பப்பு யாதவ். அப்படி செய்யக் கூடாது என்று கூறிய விமான பணிப்பெண்ணிடம், நான் ஒரு எம்.பி... நான் அதை சுத்தம் செய்யனுமா? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதேபோல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யாமலும் சீட் பெல்ட்டை ஒழுங்காக போடாமலும் பப்பு யாதவ் அடாவடியாக நடந்து கொண்டிருக்கிறார். இதனை தட்டிக்கேட்ட விமான பணிப்பெண்ணிடம் செருப்பை கழற்றிக் காட்டி அடித்துவிடுவேன் என ரவுடித்தனம் செய்திருக்கிறார்.
இது குறித்து தலைமை விமானியிடம் அந்த பணிப்பெண் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு எம்.பி. பப்பு யாதவின் அடாவடித்தனம் குறித்து புகார் செய்த கையோடு, விமானத்தை விரைவாக தரை இறக்க அனுமதியும் கோரி பாதுகாப்பு தரப்பினரின் உதவியையும் நாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமானம் தரை இறக்கப்பட்டு பப்பு யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினரால் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக விமான பணிப்பெண் எழுத்துப்பூர்வமாகவும் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் தம் மீதான புகாரை பப்பு யாதவ் மறுத்துள்ளார். தமக்கு எதிரான அரசியல் சதி இது என அவர் கூறியுள்ளார்.