திட்ட கமிஷனுக்கு மாற்றாக புதிய குழு.. யஷ்வந்த் சின்கா தலைமையில் ஆலோசனை!
டெல்லி: திட்ட கமிஷனை கலைத்துவிட்டு அமைக்கப்பட இருக்கும் புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
இளைஞர் சக்தியை நாட்டுக்கு பயன்படுத்துதல், மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக, இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்.
மக்களிடம் ஆலோசனை
பின்னர், புதிய திட்ட குழு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அதற்காக இணையதளத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
டெல்லியில் ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், திட்ட கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சின்கா தலைமையில்
இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான், ராஜ்யசபா முன்னாள் எம்.பி. என்.கே.சிங், எம்.ஜே.அக்பர், விஜய் கேல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலைக்க ஆதரவு
இக்கூட்டத்தில் திட்ட கமிஷனை கலைக்கும் பிரதமர் மோடியின் முடிவுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு நிதி
மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில், புதிய குழுவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பேசியது என்ன?
கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த்சின்கா, திட்ட கமிஷனை கலைக்கும் முடிவுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவற்றை பிரதமரிடம் தெரிவிப்போம் என்றார்.