காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் உள்ள சலுகைகள் என்ன? எதிர்ப்பு-ஆதரவுகள் ஏன்?- முழு விளக்கம்
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகள், 37ஏ சட்டப்பிரிவு அகற்ற படக்கூடாது என்று விரும்புகிறார்கள்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு என்றால் என்ன அது வழங்கியுள்ள சலுகைகள் என்ன? ஏன் அந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்படுகிறது? ஏன் ஆதரிக்கப்படுகிறது என்பது குறித்த ஒரு விரிவான விளக்கம் இது:
சட்டப்பிரிவு 35ஏ என்பது ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு பிரிவு ஆகும்.
இவர்களுக்கான சிறப்பு உரிமைகளையும் இந்த சட்டப்பிரிவு வழங்குகிறது. 1954ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் இது அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவில் சேர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன் இந்த சட்ட நடைமுறை அமலுக்கு வந்தது.
பிற மாநிலத்தவர்களுக்கு இதில் தடை
இந்த சட்டம் என்பது பொதுவாக நிரந்தர குடியுரிமை சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெறுவதையும் இது தடுக்கிறது. காஷ்மீரிலுள்ள, அசையும் சொத்துக்களை பிற மாநிலத்தவர்கள் வாங்க முடியாது. அரசு வேலைவாய்ப்பையும் பெற முடியாது ஸ்காலர்ஷிப் மற்றும் உதவிகளையும் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் பெறவே முடியாது.
பெண்களுக்கு சிக்கல்
இந்த சிறப்பு சட்டப் பிரிவில் உள்ள சில அம்சங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநில பெண்களுக்கு எதிராக இருப்பதாகவும் விமர்சனம் உண்டு. அதன்படி காஷ்மீர் பெண்கள் நிரந்தர குடியுரிமை பெறாத ஆண்களை மணமுடித்தால் அதாவது பிற மாநில ஆண்களை மணமுடித்தால் அந்த பெண்களின் சிறப்பு உரிமைகள் பறி போய்விடும் என்ற அம்சம் சட்டத்தில் உள்ளது. ஆயினும் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் கூட பிற மாநில ஆண்களை திருமணம் செய்யும் காஷ்மீர் பெண்களின் குழந்தைகளுக்கு வாரிசுரிமை மறுக்கப்படுகிறது
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை
இந்த நிலையில்தான் சட்ட பிரிவு 35ஏ செல்லத்தக்கது அல்ல என்று அரசு சாரா அமைப்பான வி தி சிட்டிசன்ஸ் என்ற அமைப்பு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 368ன் கீழ் திருத்தம் செய்யப்படாமல் இந்த சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதால் இது சட்டப்படி செல்லாது என்பது மனுவின் சாராம்சம். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலே இந்த சிறப்பு உரிமைகள் சட்ட பிரிவு என்பது அமலுக்கு வந்துள்ளது என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெண்கள் வழக்கு
உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரைச் சேர்ந்த இரு பெண்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில் தங்கள் வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைப்பதில் 35ஏ பிரிவு சிக்கலை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விளக்கம் கேட்பு
இந்த மனுக்களை பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக அட்வகேட் ஜெனரல் கே. வேணுகோபால் வாதிடுகையில், சட்டப்பிரிவு 35ஏ மிகவும் சென்சிட்டிவானது. இது மிகப்பெரிய விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு மே 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம். ஏனெனில் இது மிகவும் சென்சிட்டிவான பிரச்சினை என்று கேட்டுக்கொள்ளப்பட்டது
மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார். ஜம்மு-காஷ்மீரில் மிகவும் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு வந்து குடியேறும் ஒருவரால் பெறப்படும் உரிமையை பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக அங்கேயே வாழும் பிற மாநிலத்தவர்களால் பெற முடியாது என்பது சரியான நடைமுறை கிடையாது என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கும் பாஜக
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் நடுவேயான இணக்கமான சூழ்நிலையை கெடுப்பது இந்த சட்டம் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்து வருகிறது.
ஆதரவு அளிப்போர் கூறும் காரணம்
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகள், இந்த சட்டப்பிரிவு அகற்ற படக்கூடாது என்று விரும்புகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் பெருமளவில் குடியேற இது வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இந்த சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் யாரும் மூவர்ண கொடியை ஏந்த மாட்டார்கள் என்று தனது அதிருப்தியை கடந்த ஆண்டே, பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
காஷ்மீரில் பதற்றம்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதை எதிர்த்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.