பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் நீடிப்பு? சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய கால அவகாசம் தர முடியுமா என்பது குறித்து ஜூலை மாதத்திற்கு பிறகு ஆலோசிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதியோடு, பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 2016 டிசம்பர் 31ம் தேதியோடு, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்தது. ஆனால் என்.ஆர்.ஐகளுக்கு சாளர முறையில் ஏப்ரல் 30ம் தேதிவரை பணம் மாற்றிக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் குவிந்தன. சில தினங்கள் முன்பு இந்த வழக்குகளுக்கு பதிலளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இதற்கு மேலும் கால அவகாசத்தை நீடிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது.
இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிமன்றத்தின் கோடை விடுமுறை முடிந்த பிறகு ஜூலை மாதம் இதுகுறித்துபரிசீலிப்பதாக கூறியுள்ளது.