மோடியின் வெளிநாட்டு டூரில், வெளியுறவு அமைச்சருக்கே இடமில்லை..! பாதுகாப்பு அமைச்சரும் மிஸ்சிங்
டெல்லி: 9 நாள் பயணமாக 3 முக்கிய ஜி7 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செல்லாதது வியப்பை ஏர்படுத்தியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய ஜி7 நாடுகளின் முக்கிய 3 நாடுகளில், மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த 9ம்தேதி, இந்தியாவில் இருந்து புறப்பட்ட மோடி, பிரான்ஸ் சென்று, அந்த நாட்டுடன் ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதையடுத்து ஜெர்மனி சென்ற மோடி, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். தன்பிறகு கனடா சென்றுள்ளார் பிரதமர். கனடா நாட்டுக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான்.
சிறப்புமிக்க பயணம்
இத்தனை சிறப்பு வாய்ந்த மோடியின் சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடுகளில், பிரதமருக்கு ஈடானட முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவு துறை அமைச்சரும் உடன் சென்றிருக்க வேண்டும். இதுவரை பிரதமர்கள் அந்த மரபை பின்பற்றினர். ஆனால், இம்முறையோ சுஷ்மா சுவராஜ், மோடியுடன் பயணத்தில் பங்கேற்கவில்லை.
டெல்லியில் சுஷ்மா
ஜெர்மனியில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மோடி ஆதரவு கேட்டுக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை, டெல்லியில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி இசபெல் பிசப்பை, சுஷ்மா சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.
விமானம், மீன் கடை
பிரான்ஸ் நாட்டில், ரஃபேல் விமான கொள்முதலுக்கு மோடி ஒப்பந்தம் செய்தபோது, பாதுகாப்பு துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர், கோவாவில், மீன் கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். இது எதிர்க்கட்சிகளால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது.
என்னதான் நடக்கிறது..
சுஷ்மா சுவராஜின் முக்கியத்துவத்தை குறைக்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, அல்லது குறைந்த நிர்வாகம், நிறைந்த சேவை என்ற மோடியின், தேர்தல் முழக்கத்தின் ஒரு பகுதியா என்பது டெல்லி வட்டாரங்களில் புரியாத புதிராக உள்ளது.