திருப்பூர் சாலை விபத்தால் வேதனை.. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல்
Recommended Video
டெல்லி: திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தை அறிந்து, மிகுந்த வேதனையடைந்தேன். துக்ககரமான இந்த நேரத்தில், என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் உடல்களை, பத்திரமாக, அவர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் கொச்சி (எர்ணாகுளம்) சென்ற அந்த மாநில, அரசு பேருந்து, எதிரே சென்ற லாரியுடன் மோதிய விபத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
Extremely anguished by the bus accident in Tamil Nadu’s Tiruppur district. In this hour of grief, my thoughts and prayers are with the bereaved families. I hope those who are injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 20, 2020
எதிரே சென்ற லாரியின் டயர் வெடித்து, சாலை தடுப்பை தாண்டி, அடுத்தப்பக்கம் சென்ற பஸ் மீது மோதியதால், இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாவட்டத்திற்கு விரைந்து சென்று, கேரள பயணிகளின் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களுடன், கேரள அரசு தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவிகளை செய்து வருவதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.