ஸ்மிருதி இரானி ஆடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: ஃபேப்இந்தியா சிஇஓ, 10 பேருக்கு சம்மன்
பனாஜி: கோவாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமராவை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக ஃபேப்இந்தியா நிறுவன சிஇஓ உள்பட 10 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவாவின் கன்டோலிம் நகரில் உள்ள ஃபேப்இந்தியா கடையின் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்த போலீசார் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். பின்னர் அந்த 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாக இருந்த கடையின் மேனேஜர் சைத்ராலி சாவந்த் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் கேமரா மறைத்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு ஃபேப்இந்தியா சிஇஓ வில்லியம் பிஸ்ஸெல், தலைமை நிர்வாக அதிகாரி, மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடையின் மேனேஜர் சைத்ராலியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. கன்டோலிம் கடையில் சிசிடிவி கேமராவை பொருத்திய பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடமும் விசாரிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை இரவு ஃபேப்இந்தியா நிறுவனத்தின் ஐடி பிரிவைச் சேர்ந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.