இணைய சமநிலை தொடர்பான அறிக்கை வெளியானது! போர்டு பவுண்டேசனுடன் ஆலோசனை நடத்தியதால் சர்ச்சை!!
டெல்லி: இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள குழு சர்ச்சைக்குரிய ஃபோர்டு பவுண்டேசன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
இணைய சமநிலை என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு வெப்சைட்டுக்கும் ஆப்-க்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது என்பதாகும்.
தனியார் நிறுவனங்கள் குமுறல்
ஆனால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகளால் இழப்பு ஏற்படுகிறது; ஆகையால் இவற்றுக்கு கூடுதல் கட்டணம் அவசியம் என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் முறையிட்டன.
கொந்தளித்த இணையவாசிகள்
இந்த விவகாரம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்தது. பின்னர் இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்டது தொலைத் தொடர்புத் துறை.
|
அறிக்கை வெளியீடு
இந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.
24 பரிந்துரைகள்
மொத்தம் 111 பக்கம் விரிவான அறிக்கை இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் சுருக்கமாக 24 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை இணையவாசிகளுக்கு சாதகமானதாக இருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த பரிந்துரைகள் மீது ஆகஸ்ட் 15-ந் தேதி கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. (அறிக்கையை பார்க்க)
ஃபேஸ்புக் ஆதரவு
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகத்தின் துணைத் தலைவர் கெவின் மார்ட்டின், இணைய சமநிலை தொடர்பான இந்திய தொலைத் தொடர்புத் துறையின் பரிந்துரைகள் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த பரிந்துரைகளை ஃபேஸ்புக் ஆதரிக்கிறது என்றார்.
|
ஃபோர்டு பவுண்டேசனுடன் எதுக்கு ஆலோசனை
இதனிடையே இணையசமநிலை குறித்த பரிந்துரைகளை அளித்த குழு, அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்திருப்பது சர்ச்சையை வெடிக்க வைத்துள்ளது. எதற்காக ஃபோர்டு பவுண்டேசனுடன் இணையசமநிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது? அதுவும் வெளிநாட்டு நிதி உதவி சர்ச்சையில் சிக்கிய இந்த என்.ஜி.ஓ.வின் நிர்வாகிகளுடன் ஏன் ஆலோசனை நடத்தப்பட்டது என்ற கேள்விகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.