சிறுமிகள், பெண்களை கடத்தும் கும்பல் என்னை 17 முறை தாக்கியுள்ளனர்... ‘பத்மஸ்ரீ’ சுனிதா தகவல்
ஹைதராபாத்: பாலியல் தொழிலுக்காக சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போராடியபோது, 17 முறை தான் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் பத்மஸ்ரீ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலரான சுனிதா கிருஷ்ணன்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இவரது கதையைக் கேட்டால் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரும்.
தனது 8 வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தந்த சுனிதா, தனது 12 வயதில் ஒரு பள்ளியை நடத்தினார். 15 வயதில் தலித் சமூகத்திற்கான கல்வி இயக்கத்தைத் தொடங்கிய சுனிதாவை, 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
பிரஜ்வாலா...
ஆனால், அதிலிருந்து மீண்டு வந்த சுனிதா பாலியல் தொழிலார்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு தரும் பிரஜ்வாலா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்படுவதற்கு எதிராக இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
பத்மஸ்ரீ விருது...
இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு இந்தாண்டிற்கான பத்மஸ்ரீ விருதினை அறிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவங்கள்...
இந்நிலையில், தான் இதுவரை 17 முறை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும், தனது சக நண்பர் கொல்லப்படுவதை அருகில் இருந்து பார்த்துள்ளதாகவும் சுனிதா தெரிவித்துள்ளார்.
15,600 பெண்கள் மீட்பு...
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,600 பெண்களை அவர் பாலியல் தொழிலில் இருந்து மீட்டுள்ளார். இத்தகைய முயற்சிகளின் போது தான் அவர் 17 முறை தாக்கப்பட்டாராம்.
நன்றி...
மேலும், 'என்னை யார் என் எனக்கே அடையாளம் காட்டிய ரோஷிணி நிலையாவிற்கு எனது வணக்கத்தைச் சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் சுனிதா.
ரோஷிணி நிலையம்...
இந்த ரோஷிணி நிலையத்திற்குள் பயிற்சிக்காக வந்தபோது, சுனிதா 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பது அங்கு யாருக்கும் தெரியாதாம். அங்கு தான் கட்டுப்பாடில்லாத அன்பை மற்றவர்கள் மீது செலுத்த வேண்டும் என்பதையும், எத்தகைய சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டு துணிந்து நடைபோட வேண்டும் என்ற மனப்பக்குவத்தையும் அவர் பெற்றாராம்.
சமூக அவலங்கள்...
சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மிக்கவரான சுனிதா, இது தொடர்பாக பலமுறை அரசு மீது வழக்குத் தொடுத்துள்ளார். ஆனபோதும், தனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.
நல்ல செயல்களால் பலம்...
‘நான் அரசுக்கு நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துள்ளேன். இனியும் கொடுப்பேன். இதன் மூலம் நான் செய்யும் நல்ல செயல்கள் எனக்கு மேலும் பலத்தைக் கொடுப்பதாகவே நான் உணர்கிறேன்' என்கிறார் சுனிதா.
புன்னகைக்காக வாழ்க்கை...
"நான் மீட்டெடுத்த குழந்தைகளின் புன்னகைக்காக வாழ்கிறேன், அவர்களது கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசிப்பதைக் காண்பதற்காக நான் வாழ்கிறேன்'' என்று கூறுகிறார் சுனிதா கிருஷ்ணன்.
சவால்...
இவர் தன் முன் உள்ள சவாலாகக் கூறுவது இதைத்தான். அதாவது, ‘எனது பெரிய சவால் சமுதாயம் தான். அதாவது, நீங்களும் நானும் தான். பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு, மீட்கப்பட்ட குழந்தைகளை உள்ளவாறே ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு உள்ள மனத்தடைகள் தான் மிகப் பெரிய சவால்' என்கிறார் சுனிதா.