மகளிருக்கு தனியாக டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள்... ரயில்வேத் துறை முடிவு
டெல்லி : ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய பெண்களுக்கு தனியாக டிக்கெட் கவுண்டர்களை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்த சிறப்பு வசதியை பெற கணிணி மயமாக்கப்பட்ட ரிசர்வேஷன் கவுண்டரில் சராசரியாக ஒரு ஷிப்டுக்கு குறைந்தது 120 டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும்.
எனினும், ஏற்கனவே செயல்பட்டு வரும் சாதாரண வரிசையிலும் பெண்கள் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ரயில்வே துறை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பியுள்ளது. எனினும், இந்த சிறப்பு கவுண்டர்களில் பெண்கள் தங்களுக்காக மட்டுமே டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியும். மற்றவர்களுக்காக டிக்கெட் எடுக்க அனுமதியில்லை.
எனவே ஆண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, அவர்கள் குறைவாக கூட்டம் உள்ள பெண்கள் வரிசையில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெறமுடியாது.
இத்திட்டம் குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் மதிப்பீடு கேட்டு ரயில்வேத் துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அதனைப் பொருத்து மகளிருக்கு டிக்கெட் கவுண்டர்களில் தனி வரிசை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.