பெங்களூர் மாநகராட்சியில் காங்கிரஸ் தோற்க காரணங்கள் என்ன? முதல்வரின் பதில்கள் என்ன?
பெங்களூர்: கர்நாடக வரலாற்றிலேயே முதல் முறையாக பெங்களூர் மாநகராட்சியில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி மாநகராட்சியை சட்டைப் பையில் போட்டுள்ளது. ஆனால் ஆட்சியையும், அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டுள்ள காங்கிரசாலோ, ஆட்சியை கைப்பற்றிய பாஜகவின் பக்கத்தில் கூட போகமுடியவில்லை.
இந்த தேர்தல் முடிவுகள் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு அதிர்ச்சி. பெங்களூரை சேர்ந்த 5 பேரை அமைச்சர்களாக வைத்துள்ள ஒரு அரசு இப்படி பரிதாபமாக தோற்றால் அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும்.
முந்தையநாள் வரை கருத்துக் கணிப்புகள் அனைத்தும், காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றதில் சித்துவுக்கு பேரதிர்ச்சி. தேர்தல் முடிவுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பிலும் அந்த அதிர்ச்சி ரேகைகள் சித்து முகத்தில் படர்ந்திருந்ததை பத்திரிகையாளர்களால் பார்க்க முடிந்தது.
காங்கிரசின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை, அரசியல் நோக்கர்கள் கூறினாலும், அத்தனை காரணங்களின் மையமாக இருப்பது, காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதே. தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்தே காங்கிரஸின் குளறுபடி ஆரம்பித்துவிட்டது.
குற்றச்சாட்டு-1: தொகுதி எம்.எல்.ஏ, பிளாக் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெயரை தேர்ந்தெடுத்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தால், அவர்களைவிட்டு வேறு யாரையோ வேட்பாளர்களாக அறிவித்தது காங்கிரஸ். அதன் மர்மம்தான் தெரியவில்லை. சகாயபுரம் வார்டில் காங்கிரசில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியி்ட்ட ஏழுமலை என்ற தமிழ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது இதற்கு ஒரு சான்று. சுயேச்சையாகவே வெல்ல கூடிய திறமை உள்ளவருக்கு காங்கிரஸ் ஏன் சீட் தரவில்லை?
முதல்வர் பதில்: காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி. வேட்பாளர்களை தேர்வு செய்தபோதும் ஜனநாயக முறை பின்பற்றப்பட்டது. வார்டு பிரமுகர்கள் கொடுத்த பெயர்களை, தேர்தல் கமிட்டி பரிசீலித்துதான் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.
குற்றச்சாட்டு-2: பெங்களூர் மாநகராட்சியை 3ஆக பிரிக்கப்போவதாக அறிவித்தார் முதல்வர் சித்தராமையா. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, பாஜக பெரும்பான்மையாக உள்ள மேலவை நிராகரித்தது. 2வது முறையும் சட்டத்தை நிறைவேற்றினார் சித்தராமையா. குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக சட்டம் வெயிட்டிங்கிலுள்ளது. மாநகராட்சியை பிரித்தால் கன்னடர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற அச்சம் மண்ணின் மைந்தர்களுக்கு உள்ளது. இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாக திரும்பியது. கன்னடர்கள் ஏரியாக்களில் பாஜக கொத்தாக வென்றுள்ளது.
முதல்வர் பதில்: மாநகராட்சியை பிரிக்கும் முடிவிற்கும், தேர்தல் முடிவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அப்படியென்றால், கடந்த தேர்தலைவிட இம்முறை கூடுதல் வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே எப்படி?
குற்றச்சாட்டு-3: காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு உள்ளது. பெங்களூரை ஐடி சிட்டியாக மாற்றிய முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடவரவில்லை. சித்தராமையா காங்கிரஸ் தனியாகவும், மூல காங்கிரஸ் தனியாகவும் இயங்குகிறது.
முதல்வர் பதில்: கிருஷ்ணாவை பிரச்சாரம் செய்ய வருமாறு மாநில காங்கிரஸ் தலைவர் அழைத்திருந்தார். ஆனால் ஏதோ காரணத்தால் அவர் பிரச்சாரம் செய்யவரவில்லை. காங்கிரசுக்குள் எந்த பிளவும் கிடையாது. ஒற்றுமையாக உள்ளோம்.
குற்றச்சாட்டு-4: பெங்களூர் மக்களின் மனநிலையை கணிப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. வெற்றி பெறுவோம் என்ற நினைப்பில், மெத்தனமாக இருந்துவிட்டது.
முதல்வர் பதில்: மீடியாக்களும்கூட, தப்பாகவே கணித்தன. காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்றுதான் மீடியாக்களும் கணித்து வந்தன. ஆனால் எங்கோ தவறு நடந்துள்ளது. கடைசி நேரத்தில் நிலைமை மாறியுள்ளது. அது ஏன் என்பது குறித்து ஆலோசிப்போம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
இதுதவிர காங்கிரஸ் அரசு வந்த 3 வருட காலத்தில், பெங்களூரில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருந்தது, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தமிழர்கள் வாக்குகளை பெற பாஜகவின் எடியூரப்பாவை போன்று, சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்காதது போன்ற காரணங்களும் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்.