பலாத்கார முயற்சி தோல்வி... பள்ளி மாணவியை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்
கான்பூர்: உத்திரப்பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்ததால், அவளை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று. இதில் பலத்த காயமடைந்த அச்சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாபுபூர்வா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னர் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், அச்சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாகவும், வீட்டில் தனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதாகவும் அச்சிறுமி போலீசில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நேற்று அச்சிறுமியின் அண்ணன் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வீட்டில் தனியாக இருந்த தனது தங்கையை மூன்று பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அது நடக்காததால் அவர்கள் அச்சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு காயமடைந்த சிறுமியின் அண்ணன் போலீசில் அளித்துள்ள புகாரால் இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் அண்ணன் தனது புகாரில் ஆரிப், தேகன் மற்றும் அசாம் என்ற மூன்று பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.
மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படும் மாணவிக்கு இரண்டு கால்களில் எலும்பு முறிவு மற்றும் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.