உதவி செய்வது குத்தமாய்யா.. வடிவேலு திரைப்பட பாணியில் பெங்களூரை உலுக்கும் நூதன வழிப்பறி.. உஷார்
Recommended Video
பெங்களூர்: வடிவேலு ஒரு திரைப்படத்தில் வழிப்பறி செய்ய ஒரு கும்பலை வைத்துக்கொண்டு, வாகனங்கள் முன்னால் சென்று விழ வைத்து, போலியாக விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
படத்தில் பார்க்கும்போது சிரித்து மகிழ்வதை போல இருக்கும் இந்த காட்சிகள் உண்மையிலேயே நடந்தால்? பாதிக்கப்பட்டவர்கள் நிலை எப்படி இருக்கும் தெரியுமா?
பெங்களூரில் இப்போது அதுபோன்ற நூதன வழிப்பறி அதிகரித்துள்ளதாக காவல்துறையில் பதிவாகும் வழக்குகள் தெரிவிக்கின்றன.
இன்ஜினியரிங் மாணவர்
பெங்களூர் ஜெயநகரில் நடந்த இந்த ஒரு சம்பவம் அதன் லேட்டஸ்ட் உதாரணமாகும். பெங்களூரின், உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகுல் கவுடா. இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர். இவர் ஜெயநகரிலுள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காரை ஓட்டியபடி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
காரில் மோதிய ஸ்கூட்டர்
ஜெயநகர் 8வது பிளாக் பகுதியில் உள்ள சங்கம் சர்க்கிள் பகுதியில் அவர் கார் வந்தபோது திடீரென சிவப்பு நிற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று இவரது காரில் மோதி கீழே விழுந்தது. அதில் பயணித்த நபர், அய்யோ, அம்மா என கத்தி கூச்சலிட்டபடி வலியால் துடிப்பதை போல உருண்டார். இதை பார்த்து மனம் இளகிய ராகுல் கவுடா, காரில் இருந்து கீழே இறங்கினார்.
திடீர் கும்பல்
ராகுல் கீழே இறங்கிய உடன் இன்னும் சில பைக்குகளில் வந்த 7 பேர், அவரை சூழ்ந்து கொண்டனர். பைக் மீது மோதிவிட்டதாக கூறி ராகுல் கவுடாவை திட்ட ஆரம்பித்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் உதவிக்கு வர முயன்றபோது, நீங்கள் வேண்டாம், நாங்களே மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறோம் என கூறி, இந்த கும்பல் அவர்களை கூட்டம் சேரவிடாமல் விரட்டிவிட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த நபரை ராகுல் காரில் ஏற்றி படுக்க வைத்துவிட்டு, சக நண்பர்களில் ஒருவன் காரை ஓட்டியுள்ளான். ராகுலும் காருக்குள் உட்கார வைக்கப்பட்டிருந்தார். கூடவே மேலும் சில நபர்களும் உட்கார்ந்தனர். எஞ்சியவர்கள் காரின் பின்னால் ஸ்கூட்டரில் ஃபாலோ செய்தனர்.
காரில் கடத்தல்
ஆனால், கார் மருத்துவமனையை தாண்டி சென்றதும் ராகுலுக்கு சந்தேகம் வந்தது. காரை நிறுத்துமாறு சத்தம்போட்டார். ஆனால் உடன் வந்த நபர்களோ ராகுலை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த வைர மோதிரம் உட்பட ஆபரணங்களை பறித்தனர். ரெசிடென்சி ரோடு பகுதிக்கு சென்று மதுபான கடையில் மது வாங்கி வந்துள்ளனர். அதை குடிக்குமாறு ராகுலை வற்புறுத்தியபோது அவர் மறுக்கவே, பீர் பாட்டிலை உடைத்து ராகுலை தாக்கியுள்ளனர். இதன் பிறகு 2 மணி நேர சுற்றலுக்கு பிறகு, மீண்டும் ஜெயநகர் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் போலீசார் இருப்பதை ராகுல் கவனித்துள்ளார். பின் சீட்டில் இருந்தாலும், சுதாரித்துக்கொண்டு, டிரைவரின் இடதுபக்கம் இருக்கும், ஹேண்ட் பிரேக்கை பிடித்து இழுத்துள்ளார். இதனால் கார் திடீரென நடுரோட்டில் நின்றது.
இதேபோன்ற சம்பவம்
சமீபத்தில் தேவனஹள்ளி பகுதியில் மோகன் என்ற சேல்ஸ் எக்ஸ்சிகியூட்டிவ் மற்றும் அவரது நண்பர்கள், பைக்கில் இருந்து கீழே விழுந்த ஒருவரை காப்பாற்ற சென்றபோது கத்தி முனையில் வழிப்பறிக்கு உள்ளாகினர். இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூரில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்போடு இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். யாராவது கீழே விழுந்தால், உடனே காவல்துறை, ஆம்புலன்ஸ்சுக்கு சம்பவ இடம் குறித்து தகவல் கூறுவது நல்லது என்பதோடு, ஒருவேளை கடத்தப்பட்டால், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தங்களகு லொகேஷனை ஷேர் செய்துவிடுவது நல்லது என்கிறார்கள் காவல்துறையினர்.