சச்சின் மகள் பெயரில் ஃபேக் டுவிட்டர் ஐடி.. இன்ஜினியர் அதிரடி கைது
சச்சின் பொண்ணு பெயரில் போலி சமூக வலைதள அக்கவுன்ட்டை தொடங்கிய மும்பை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
மும்பை: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கிய மும்பை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் சாராவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவது தொடர்பாக அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அவரின் தந்தையிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த நிதின் ஷிஷ்கோட் என்ற வாலிபர் சாராவின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஷர்தா பவார் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
இந்நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியிருந்த நிதினை மும்பை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப், செல்போன் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர். அவர் மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.