உஷார் மக்களே.. கர்நாடகாவில் சிக்கியது 2000 ரூபாய் போலி நோட்டு! கலர் ஜெராக்ஸ் எடுத்தது அம்பலம்
பெங்களூர்: புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பாகிஸ்தான் உளவுத்துறையே நினைத்தாலும் போலியாக உருவாக்க முடியாது என்று தகவல்கள் வெளியான நிலையில், கர்நாடகாவில், இந்த ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, வெங்காய வியாபாரியை ஏமாற்றியுள்ளனர் விஷமிகள்.
பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை மத்திய அரசு வெளியிடத் தொடங்கியுள்ளது. இதில் 2000 ரூபாய் நோட்டு மிகவும் வித்தியாசமாக உள்ளது. பிங்க் வண்ணத்தில் பளபளப்பாக வித்தியாசமாக காட்சியளிக்கிறது இந்த நோட்டு.
சிலர் நிஜாம் பாக்கு பாக்கெட்டை இன்ஷ்பையர் செய்துதான் இந்த ரூபாய் நோட்டே தயாரிக்கப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள். இது குற்றமென்றபோதிலும், கிண்டல்கள் நின்றபாடில்லை.
Fake Copy of New Rs 2000 Note Found in #Chikmagalur of Karnataka. A farmer was cheated by an unknown person on today #rupee #notes pic.twitter.com/X6xWYcPRtW
— Veerakumaran (@Veeru_Journo) November 12, 2016
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்மகளூர், ஏபிஎம்சி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரம் செய்து வரும், அசோக் என்பவரிடம், இன்று அதிகாலை கஸ்டமர் போல அணுகிய ஒருவர் ரூ.2000 நோட்டு ஒன்றை நீட்டி காய்கறி வாங்கி சென்றுள்ளார். ஆனால், இது போலி நோட்டு என்பது பின்னர்தான் தெரியவந்தது. போலீசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். ரூபாய் நோட்டின் பக்க வாட்டில் கத்திரியால் வெட்டப்பட்டதற்கான தடயமும் கிடைத்துள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டு, கலர் ஜெராக்ஸ் எடுக்க ரொம்பவே வசதியானதாக இருப்பதும், இந்த ரூபாய் நோட்டு மக்களிடம் அறிமுகம் இல்லாததும் விஷமிகளுக்கு வசதியாக போய்விட்டது. எனவே மக்களே 2000 ரூபாய் நோட்டு விஷயத்தில் உஷாராக இருங்கள்.