பாகிஸ்தானின் ரூ10,000 கோடி கள்ள நோட்டு ப்ளானை தவிடுபொடியாக்கிய 'ரா'... சர்வதேச நெட்வொர்க் அழிப்பு..
டெல்லி: இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்க ரூ10,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருந்த சதிச் செயலை 'ரா' அமைப்பு முறியடித்துள்ளது. இதற்கான சர்வதேச நெட்வொர்க்கையும் ரா அதிகாரிகள் அழித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக கள்ள நோட்டுகள் இறக்கிவிடப்பட்டன. ஆனால் இந்த வழிகளையெல்லாம் இந்தியா அடைத்துவிட்டது.
இதனால் தற்போது வெளிநாடுகள் வழியாக இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் நடவடிக்கையை பாகிஸ்தான் உளவு அமைப்பு செயல்படுத்தத் தொடங்கியது. முதலில் வங்கதேசம் வழியாக கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைத்தது ஐ.எஸ்.ஐ. ஆனால் இந்த நெட்வொர்க்கையும் அழித்துவிட்டது இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'.
இதன் பின்னர் சீனா, தாய்லாந்து, இலங்கை என பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை அனுப்பத் தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த கூரியரில் பெருமளவு கள்ள நோட்டுகள் இருந்தது அம்பலமானது. அதே பெயரில் மீண்டும் மீண்டும் சீனாவில் இருந்து கள்ள நோட்டுகள் வரத் தொடங்கியதையும் ரா கண்டுபிடித்தது.
இதைத் தொடர்ந்து தாய்லாந்தில் சஜ்ஜத் நூர், அலி ஹபீஸ், நூர் ஷாகித் ஆகியோரை கைது செய்ய வைத்தது 'ரா'. இந்த 3 பேரும் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வந்திருப்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளநோட்டுக்கான சர்வதேச நெட்வொர்க் அம்பலமானது.
அதாவது பாகிஸ்தானில் இருந்து தாய்லாந்துக்கு முதலில் கள்ள நோட்டுகளைக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் தாய்லாந்தில் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வரும் பாகிஸ்தானியர்கள் கைக்கு இந்த கள்ள நோட்டு போய்ச்சேரும். பின்னர் இந்த பாகிஸ்தானியரிடம் வேலைபார்க்கும் இலங்கை மற்றும் கம்போடிய நாட்டவர்கள் மூலமாக இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ரூ10,000 கோடிக்கு இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதுதான் பாகிஸ்தானின் திட்டம். இதை கடந்த சில மாதங்களாக நடத்திய சர்வதேச வேட்டையில் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது 'ரா'.