"அடப்பாவிங்களா.. இதுக்குமா பிளாக் டிக்கெட்" - திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்!
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி: போலியாக விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளால் திருப்பதி கோயில் தரிசன வரிசைகளில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்டிக்கன், மெக்கா போல உலகளவில் பிரபலமான கோயில்கள் பட்டியலில் திருப்பதிக்கும் சிறப்பு இடமுண்டு. வருடம் முழுவதும் பக்தர்கள் குவியும் இந்த கோயிலில் நெரிசல்களை தவிர்ப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பாக தரிசன வரிசைகளை பல வகைகளாக பிரித்து அதற்கு டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.
விவிஐபி, விஐபி, 500ரூபாய், 300 ரூபாய், 100ரூபாய், தர்மதரிசனம் என பலவகையில் பிரிக்கப்பட்ட இந்த தரிசன டிக்கெட்டுகளை போலியாக தயாரித்து ஒரு கும்பல் விற்பனை செய்து வந்தது. இந்த போலி டிக்கெட்டுகளால் தரிசன வரிசையில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திர சிறப்பு பிரிவு போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார், முறைகேடாக போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் மேலும் பல அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதால், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.