முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன்... ஐடி பெண்ணை ஏமாற்றிய சாமியார்... மோசடி செய்தது எப்படி
முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன் என்று கூறி ஐடி பெண்ணை போலி சாமியார் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார்.
தானே: முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன் என்று கூறி ஐடி பெண்ணை போலி சாமியார் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார். 'சைலால் ஜேதியா' என்ற இந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் அந்த ஐடி பெண்ணை மனைவி என்று கூறி பல முறை வன்புணர்வு செய்து இருக்கிறார். மேலும் பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி வேறு செய்து உள்ளார்.
இவர் எப்படி எல்லாம் பொய் சொன்னார் என்பதை ஏமாந்த பெண் வாக்குமூலமாக அளித்து உள்ளார். இவர் இந்த பெண்ணை மட்டும் இல்லாமல் நிறைய பேரை இப்படி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.
புகழ்பெற்ற சைலால் ஜேதியா
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் மிகவும் புகழ்பெற்ற சாமியாராக திகழ்ந்து வந்தார் சைலால் ஜேதியா. இவர் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு முன் ஜென்மம் குறித்து விளக்குவது, நோய்களை குணமாக்கும் வழிகளை சொல்வது என நிறைய சேவைகளை செய்து வந்தார். இவர் தான் செய்யும் எல்லா வேலைகளுக்கும் 3 லட்சத்திற்கும் குறையாமல் பணம் வசூலித்து உள்ளார்.
முன்ஜென்மத்தில் கணவன்
இதேபோல் அவரிடம் ஆசி கேட்க வந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தியை இவர் நூதனமாக ஏமாற்றி உள்ளார். அந்த பெண்ணிடம் ''நீதான் என் முன்ஜென்ம மனைவி. நாம் ஒன்றாக பல காலம் வாழ்ந்தோம். தாஜ்மஹாலுக்கு எல்லாம் ஒன்றாக சென்று இருக்கிறோம்'' என்று கதை விட்டு இருக்கிறார். இவரை அந்த பெண் அப்படியே நம்பி உள்ளார். இதை பயன்படுத்தி அந்த பெண்ணை பல முறை வன்புணர்வு செய்து இருக்கிறார்.
பணம் மோசடியும் செய்தார்
அந்த பெண்ணின் தந்தை பல காலமாக மோசமான பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த சாமியார், அவள் தந்தையின் நோயை குணப்படுத்துவதாக உறுதி அளித்து உள்ளார். இதற்கு கட்டணமாக 3 லட்சம் பணம் வேறு வாங்கியுள்ளார். இதேபோல் அவர் இன்னும் சிலரிடம் லட்சக் கணக்கில் ஏமாற்றினார்.
வீடியோ மூலம் மிரட்டல்
இந்த நிலையில் அந்த பெண் தன் தந்தையின் உடல் சரியாகாததால் சாமியாரிடம் செல்வதை குறைத்து உள்ளார். இதையடுத்து சாமியார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சீடி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அந்த பெண்ணை இவர் வன்புணர்வு செய்த காட்சிகள் இடம்பிடித்து இருக்கிறது. அதனுடன் வந்த கடிதத்தில் இவர் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி எழுதி இருக்கிறார். இதை அடுத்து பயந்து போன அந்த பெண் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெயில் இல்லை
இரண்டு நாட்களுக்கு முன் இவர் போலீசால் கைது செய்யப்பட்டார். நேற்று இவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர் தானே நீதிமன்றத்தில் பெயில் வேண்டி விண்ணப்பம் வைத்து இருந்தார். ஆனால் இவருக்கு பெயில் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.