போலி வழக்கறிஞர் பட்டம்..டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் நிராகரிப்பு..
டெல்லி: வழக்கறிஞருக்கு படிக்காமலேயே போலியாக பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் ஜாமின் மனுவை சாகெட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை கைது செய்து கடந்த 9-ம் தேதி மாலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜிதேந்தர் சிங் தோமரை நான்கு நாள் விசாரணை காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த கெடு முடிவடைந்த நிலையில் 13-ம் தேதி அவர் மீண்டும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தோமர் வைத்திருந்த அத்தனை ஆவணங்களும் போலியாக உள்ளதால் அவரிடமும், அவருக்கு இந்த ஆவணங்களை தயாரித்து அளித்த பிறரிடமும் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், எனவே, தோமரின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்று தோமரின் விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி பூஜா அகர்வால், உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த 2 நாள் விசாரணை காவல் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அன்று மாலை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கிணங்க அவரது விசாரணை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அனுமதி அளித்தார்.
அந்த கெடுவும் முடிவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தோமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மூன்றாவது முறையாக அவரது விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்குமாறு நீதிபதியிடம் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, தோமரின் விசாரணை காவலை 21-ம் தேதி (நேற்று) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் கேட்டிருந்த விசாரணை காவல் கெடு முடிவடைந்ததால் அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சாகெட் நீதிமன்றத்தில் தோமரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, தோமரை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது ஜாமின் மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுகொள்ள முடியாது என அறிவித்த நீதிபதி, தோமரை மேலும் ஒருநாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தோமரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.