டெல்லி ஏடிஎம்மில் போலி 2000 ரூபாய் நோட்டு வந்தது எப்படி? அறிக்கை கேட்கிறது நிதி அமைச்சகம்
டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஒன்றில் ரூ.2,000 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் வந்தது குறித்து அறிக்கை அனுப்புமாறு வங்கி நிர்வாகத்திடம் நிதி அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.2000 போலி நோட்டுகள் வந்ததோடு அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக குழந்தைகள் வங்கி என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை அடுத்த பரபரப்பு நிலவியது.
டெல்லியைச் சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் கடந்த 6-ஆம் தேதி டெல்லி சங்கம் விஹாரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூ.8,000 எடுத்தார். அதில் வந்த 4 எணணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோதும் போலி ரூபாய் நோட்டுகளே வந்தன.
இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் போலி ரூபாய் நோட்டுகள் வந்திருப்பது வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கை அனுப்புமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.