இடதுசாரிகளின் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: ஜெய்ராம் ரமேஷ்
இடதுசாரிகளின் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் : இடதுசாரிகள் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், திரிபுராவில் இடதுசாரிகளின் தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என்று குறிப்பிட்டார்.
மேலும், இடதுசாரிகள் அரசியலில் எங்களுக்கு போட்டியாளர்களாக இருந்தாலும், அவர்களின் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் . அது இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கான இழப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூகம் மாற்றமடைவது போல மக்களின் ஆர்வமும், மாற்றமடைகிறது. இதனை உணர்ந்து, இடதுசாரிகள் விரைவில் தங்களது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில், இனி ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்கப்போவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் விமர்சகர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், சமீபத்தில் நடந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் தோல்வியைத் தழுவியுள்ளது.
திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து தற்போது ஆட்சி அதிகாரத்தை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ள சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் பேச்சு குறிப்பிடத்தக்கது.