கணவர் மீதான வரதட்சணை புகார் பொய்யாக இருந்தால் "டைவர்ஸ்" தான்... உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: கணவர் மீதான வரதட்சணைக் கொடுமை புகார் பொய் என நிரூபிக்கப்பட்டால் கணவருக்குத் தாராளமாக விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா ஆகியோருக்கு 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கை இனிதாக சென்றுகொண்டிருந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சுனிதா.
இந்நிலையில் இருவரின் இல்லற வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் 1995 ஆம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் கணவரின் இல்லத்தில் இருந்து வெளியேறிய சுனிதா தனது சகோதரரின் இல்லத்தில் வசித்து வந்தார். இதையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீநிவாஸ் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மீது வரதட்சணை கேட்டதாக சுனிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கணவர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு அங்குள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்ற விசாரணையின் முடிவில் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்கவில்லை என்பது நிரூபணமானது.
எனவே அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ஹைதராபாத் குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சுனிதா மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணையின் முடிவில் 2005 ஆம் ஆண்டு விவாகரத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீநிவாஸ் வழக்கு தொடர்ந்தார். அங்கு இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளான விக்ரம்ஜித் சென், பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் கடந்த 19 ஆம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
அத்தீர்ப்பின்படி, திருமண பந்தத்தின் அடிப்படை மாண்பை குலைக்கும் விதமாக தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டதாக மனைவி கொடுத்த புகார் பொய் என நிரூபணமானால் அந்த ஒரு காரணத்திற்காகவே மனைவியிடமிருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.