அந்த மவராசனுக்கா சிறை?: கவலையில் சல்மான் தத்தெடுத்த குடும்பம்
காஷ்மீர்: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து காஷ்மீரில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
2002ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்றார். 13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சல்மானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து காஷ்மீரில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சல்மான் கபீர் கான் இயக்கத்தில் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கையில் 75 வயது ஜைனா பேகம் சல்மானை சந்தித்து தனது 40 வயது விதவை மகள் மற்றும் 4 பேரக்குழந்தைகளை காக்க கஷ்டப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து சல்மான் அந்த குடும்பத்தையே தத்தெடுத்துக் கொண்டார். அந்த குடும்பத்தார் தான் தற்போது சல்மானை நினைத்து கவலையில் உள்ளனர்.
காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த சல்மான் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி மும்பை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.