என் காதலனை கொன்னுட்டாங்க... என்னையும் சுட்டாங்க - பெற்றோர், தாய்மாமன் மீது பெண் புகார்
அலிகார்: மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், காதலர்களை பிரித்த கையோடு, இளைஞனை சுட்டுக்கொன்று விட்டு மகளையும் துப்பாக்கியால் சுட்டு புதரில் வீசிவிட்டு சென்று விட்டனர். அந்த பெண்ணிற்கு ஆயுசு கெட்டி அதனால்தான் பொதுமக்கள் சிலரால் காப்பாற்றப்பட்டு தனது கண்ணீர் கதையை நீதிபதி முன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் சொந்த ஊர் பர்தர் கிராமம். பெற்றோர் அப்ரஸ், நூர்ஜகான் என்பதாகும். மாமாவின் பெயர் இப்ஜாத். அந்த பெண்ணிற்கு அலிகாரைச் சேர்ந்த அமீர் என்பவரின் மீது காதல் ஏற்பட்டது. அது அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கேட்கவில்லை.
இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு அலிகார் சென்ற பெண்ணின் பெற்றோர் அமீரை சுட்டுக்கொன்று விட்டனர். இது குறித்து சிவில் லைன் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீரை கொன்ற மூவரும் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி அந்த பெண்ணையும் சுட்டுள்ளனர். அவள் இறந்து விட்டதாக நம்பு புதரில் தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டனர்.
பகதூர்பூர் கிராமவாசிகள் சிலர் அந்த புதர் பக்கம் போன போது முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தை வைத்து பெண்ணின் பெற்றோர், மாமா ஆகியோர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. தலைமறைவான மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள், மகள், மருமகனை ஆணவக்கொலை செய்து வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் என பல மாநிலங்களில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. வேறு சாதி திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் ஒரே மதமாக இருந்தும் பொருளாதார சூழ்நிலையை வைத்து காதலுக்கு மறுப்பு தெரிவிப்பதோடு கொலை செய்ய துணிகின்றனர்.