பறவை காய்ச்சலை பரப்ப பிரியாணி சாப்பிடுகிறார்கள்.. போராடும் விவசாயிகள் மீது பாஜக தலைவர் புது அட்டாக்
ஜெய்ப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகள் பறவை காய்ச்சலைப் பரப்புவதற்காகவே சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறார்கள் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 47ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகரில் தற்போது மோசமான வானிலை நிலவும் நிலையிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் தொடரும் துயரம்.. 47வது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை
பிரியாணி சாப்பிடுகிறார்கள்
இந்நிலையில், தலைநகரில் போராடும் விவசாயிகளைக் கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மதன் திலாவர் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அவர்கள் பிரியாணி, உலர்ந்த பழங்களை உண்டு மகிழ்கின்றனர். அவர்கள் தங்கள் உடைகளைக்கூட அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பல பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கக்கூடும்.
பறவை காய்ச்சல் பரவும்
திருடர்களும் கொள்ளையர்களும் கூட அவர்களுக்குள் இருக்கலாம். விவசாயிகளின் விரோதிகளும் அந்தக் கூட்டத்தில் இருக்கலாம்.பேச்சுவார்த்தை மூலமோ அல்லது பலத்தைப் பயன்படுத்தியோ அடுத்த சில நாட்களில் அரசு இவர்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் பரவும் ஆபத்தான நிலை எழக்கூடும் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
காங்கிரஸ் தாக்கு
மதன் திலாவரின் இந்த சர்ச்சை கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, இவை பாஜகவின் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன என்று விமர்சித்தார். மேலும், இதுபோன்ற கருத்துக்கள் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ள டோட்டாஸ்ரா, "நமக்காகக் கடினமாக உழைத்து உணவை வழங்கும் இவர்கள், பறவைக் காய்ச்சலைப் பரப்புகின்றனர் என்று எப்படிக் கூறலாம்?" என்று தெரிவித்தார்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஏற்கனவே, கேரளா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், மதன் திலாவர் இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார். முன்னதாக, டெல்லியில் போராடும் விவசாயிகள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் சிலர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.