முதல்வர் எடப்பாடியார் விவசாயிகளைக் கைவிடமாட்டார்: அய்யாகண்ணு எக்ஸ்ளூசீவ் பேட்டி - வீடியோ
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகளை கைவிட மாட்டேன் என உறுதிமொழி அளித்துள்ளார் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
டெல்லி: விவசாயிகளை கை விட மாட்டேன். கண்டிப்பாக உதவி செய்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளிடம் உறுதியளித்ததாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக முதல்வரை சந்தித்து விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: ''விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தனிநபர் இன்ஸ்சூரன்ஸ் வேண்டும், 60 வயது மேலான விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வாங்க வேண்டும், நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் ரோட்டிலேயே உண்டு, உறங்கி, போராடி வருகிறோம். மழை பெய்தாலும் கடும் வெயில் அடித்தாலும் ரோட்டிலேயே படுத்துள்ளோம்.
முதல்வர் எடப்பாடி வாக்குறுதி
இன்று டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 36 விவசாயிகள் சென்று சந்தித்தோம். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை சொன்னோம். அதற்கு அவர் பிரதமர் மோடியை சந்திக்கும் போது கண்டிப்பாக சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.
இரண்டு தடுப்பணைகள்
அரியலூரில் உள்ள மருதையாறு மற்றும் விருதுநகர் மாவட்டம் குண்டாறு ஆகிய இரு ஆறுகளில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்குகிறேன் என வாக்குறுதி அளித்தார். விவசாயிகளை நான் ஏமாற்ற மாட்டேன். உதவி செய்வேன் என முதல்வர் உறுதிமொழி அளித்திருக்கிறார்.
திருநாவுக்கரசர் சந்திப்பு
தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எங்களை சந்தித்தார். சோனியா காந்தி மற்றும் குலாப் நபி ஆசாத்திடம் எடுத்துக்கூறி நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து பேசச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
102 எம்.பிக்கள், இந்திய விவசாயிகள் சப்போர்ட்
அதுமட்டுமில்லாமல் 102 எம்.பிக்கள் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்க வேண்டும் என எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார்கள். அதை இன்று பிரதமர் அலுவலகத்தில் கொடுக்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல் 29 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று பொதுக்குழு கூட்டத்தை டெல்லியில் கூடுகிறார்கள். அவர்கள் தமிழக விவசாயிகள் வறட்சியால் வாடுவதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றவுள்ளார்கள். அந்த தீர்மானத்துடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்கள்.
சாகும் வரை போராட்டம்
அதோடு, திருப்பூரைச் சேர்ந்த நாராயணசாமி மற்றும் திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற கோரிக்கையுடன் மூன்றுநாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி எங்களை ச்ந்திக்கும்வரை போராட்டம் தொடரும். எங்கள் முயற்சி வெற்றியடையும் என நம்புகிறோம்''- இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.