நாடு முழுவதும் நாளை முதல் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.. விவசாயிகள் அதிரடி முடிவு
நாடு முழுவதும் விவசாயிகள் நாளை முதல் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
மும்பை: விவசாயிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக்கோரி மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகள் நாடு முழுவதும் விவசாயிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் தொடர் தற்கொலை, மத்திய அரசின் மோசமான விவசாயக் கொள்கை, விவசாயத்தை அயல்நாட்டுப் பண்ணை முதலாளிகளின் கையில் ஒப்படைக்கத் துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து விவசாயிகள் மீண்டும் நாடுதழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து நாட்டின் அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை இந்தப் போராட்டம் நடக்க உள்ளதால், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, மத்திய பிரதேசம் , உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய நகரங்கள் காய்கறி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதுகுறித்து பாரதிய கிஷான் சங்கத்தினர் கூறுகையில், மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்திய வரலாற்றில் விவசாயிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாகக் கருதப்படும் அளவிற்கு மத்திய அரசு நடந்துகொண்டது. தன்னுடைய தவறை மறைக்க விவசாயிகளின் தற்கொலையை மூடிமறைத்து திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகிறது.
காற்றில் பறந்த வாக்குறுதிகள்
மார்ச் மாதம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய மாநில அரசுகள் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டன. இதனால் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அதனால், இம்முறை வெறும் மகாராஷ்டிராவோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நன்மை இல்லை
வேளாண்துறையில் தன்னிறைவு பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் நிறுவனங்கள் விவசாய உற்பத்தியில் இறங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மோடி அரசு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் மத்திய அரசால் நன்மை ஏற்படுவது இல்லை.
நாடு முழுவதும் வேலைநிறுத்தம்
விவசாய கடன் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குதல், உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000 உதவித்தொகையை ஆண்டுதோறும் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிர விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பால் உற்பத்தியாளர் சங்கம்
இந்நிலையில், தாங்கள் இதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் காவல்துறையை நாடியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் நாங்கள் யாரையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். 130 விவசாய அமைப்புகளை உள்ளடக்கிய பாரதிய கிஷான் சங்கம் இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.