டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்
41 நாள் போராட்டத்திற்கு பின்னர் டெல்லியில் இருந்து தமிழகம் புறப்பட்டனர் விவசாயிகள்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்.
வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் போராட்டம் 41-ஆவது நாளை எட்டியது. இந்நிலையி்ல அனைத்து முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை முதல்வர் சந்தித்து பேசினார். போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையேற்ற விவசாயிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் எனவும் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்ற விவசாயிகள் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டனர். தமிழ்நாடு விரைவு ரயிலில் டெல்லியில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் நாளை சென்னை வந்தடைவார்கள்.