டெல்லியில் மொட்டை அடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் இன்று 8-ஆவது நாளாக போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்து கொண்டு இன்று 8-ஆவது நாளாக ஈடுபட்டனர்.
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை அமைத்தல், நதிகளை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் 41 நாள்கள் நடைபெற்ற நிலையில் மத்திய, மாநில அரசு பிரதிநதிகளின் கோரிக்கையை ஏற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், தங்களுக்கு வாக்களித்தபடி மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளாததால் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 16-ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதர்களை ஏரில் பூட்டி உழுதல், செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொள்ளுதல் என தினம் ஒரு போராட்டம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று 8 வது நாள் போராட்டத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் போராட்டத்தை தொடங்கினர்.
மேலும் ஒரு சில விவசாயிகள் இன்று மொட்டை அடித்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாக்கண்ணுவின் மனைவிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் அய்யாக்கண்ணு இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். ஆனாலும், சங்க மாநில துணை தலைவர் கரூரை சேர்ந்த கிட்டப்பா ரெட்டி தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு கூறினார். அதன்படி டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.