டெல்லியில் தமிழக விவசாயிகள் பாடை கட்டிப் போராட்டம்... பாராமுகமாக மத்திய அரசு!
தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று படை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் 15ஆவது நாளான இன்று பாடை கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்காணு தலைமையில் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதியிலிருந்து இரண்டாம்கட்ட போராட்டத்தைத் தொடங்கி, மொட்டையடித்துப் போராட்டம், தரையில் உருண்டு போராட்டம் என ஒவ்வொரு நாளும் நூதனமுறையில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் 15ஆவது நாளாக போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்றும் தொடர்கிறது. அதில், பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் துயர் நிறைந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறினார்.
ராமேஸ்வரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எதுவும் கூறவில்லை. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வது குறித்தும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தமிழக விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.