விலை போகாத வெங்காயம்.. கண்ணீரில் விவசாயிகள்.. நாசிக்கில் ஒரு கொடுமை
Recommended Video
நாசிக்: வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், விரக்தி அடைந்த இரண்டு விவசாயிகள், சாலையில் வெங்காயத்தை கொட்டிவிட்டு சென்றனர்.
4 மாதங்களாக நிலத்தில் பாடுபட்டு விளைவித்த வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வந்தால், விவசாயத்திற்கு ஆன பணம் கூட கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் புகார்.
சிலர் மனம் வெறுத்து கிடைத்த பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். சிலர் மனம் வெதும்பி மட்டமான விலைக்கு கொடுக்காமல், அரசுக்கு தங்கள் வெறுப்பை காட்டும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் விரக்தி
அந்த வகையில், இரண்டு விவசாயிகள் டிராக்டரில் கொண்டு வந்த வெங்காயத்தை சாலைகளில் கொட்டி விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விலைபோகாத வெங்காயம்
இதே போல, கடந்த வாரம் சஞ்சய் சாதே என்பவர் விற்பனைக்காக கொண்டு வந்த 750 கிலோ வெங்காயம், ரூ.1.20 காசுகளுக்கு போனதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வெங்காயம் விற்ற காசான ரூ.1,064ஐ பிரதமருக்கு மணி ஆர்டர் செய்தார்.
விலை இல்லை
மேலும், நாசிக் மாவட்டத்தை சேர்ந்த சந்திரகாந்த் பிகான் தேஷ்முக் என்ற விவசாயி 545 கிலோ வெங்காயத்தை விற்றதில் கிடைத்த ரூ. 216 பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வெங்காய உற்பத்தி
இந்தியாவில் 40 சதவீத வெங்காய உற்பத்தி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து கிடைக்கும் நிலையில், அங்கு விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
உச்சத்தில் விலை
இதற்கிடையே, வெங்காய உற்பத்தி குறைந்தபோது பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் இந்தியா இறக்குமதி செய்தது. வெங்காயம் விலை உச்சத்தை தொட்டு மக்களை அல்லாட வைத்தது. விவசாயத்தை காக்கவும் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
நிர்வாணப் போராட்டம்
தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமையோ சொல்லில் அடங்காது என்று கூறும் விவசாயிகள் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்தவும் தயங்கவில்லை. நூறு நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை. இன்னும் பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.