காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வாங்கித் தரவும் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதனையும் ஏற்க மறுக்கிறது மத்திய அரசு. இதுபோன்ற விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகமாகும்.
காவிரி பிரச்சனை தொடர்பாக எங்களுடைய குறைகளை பிரதமர் மோடி கேட்பார் என்று நம்பி டெல்லி வந்தோம். ஆனால் அவர் எங்களை சந்திக்க நேரம் அளிக்கவில்லை. வேளாண் துறை அமைச்சரை பார்க்க மட்டுமே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு இதுவரை முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தை சட்டப் பிரச்னையாக மாற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற உண்மைக்கு மாறான நடவடிக்கையை செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரி டெல்டா பகுதிகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
மத்திய அரசின் வேளாண், பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளையும், அமைப்பு சாராத் தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளன. தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, கிராமப்புற விவசாயமும், கூட்டுறவு சங்கங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று பதில் அளிக்க வேண்டும் என்றும் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.