சுயாட்சி பற்றி பேசினால் தேசவிரோதிகளா? இதயங்களை வெல்ல சுயாட்சி தேவை: பரூக் அப்துல்லா பரபர பேச்சு
ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டுமானால் சுயாட்சியை கொடுக்க வேண்டும் என பரூக் அப்துல்லா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி கொடுப்பது பற்றி பேசினால் தேசவிரோதிகளாக முத்திரை குத்துவதா? இந்தியா மீதான விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் சுயாட்சி வழங்க வேண்டும் என்பது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து. அவரது இக்கருத்து நாடு முழுவதும் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.
ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே ஸ்ரீநகரில் நேற்று தேசிய மாநாட்டு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் 15 ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்றது.
பண்ட்டிடுகளின் தாயகம் அல்ல
இக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேசியதாவது:
பண்டிட்டுகளும் காஷ்மீரின் ஒரு அங்கம். அவர்கள் காஷ்மீருக்கு திரும்ப வேண்டும். பண்டிட்டுகள் திரும்பாமல் காஷ்மீருக்கு முழுமை அடையாது. அதேநேரத்தில் பண்டிட்டுகளின் தாயகம் ஜம்மு காஷ்மீர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கே முஸ்லிம்களுடன் பண்டிட்டுகள் இணைந்து வாழலாம். பண்டிட்டுகளை முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள்.
விசுவாசத்துக்கு பரிசா?
காஷ்மீருக்கு சுயாட்சி குறித்து பேசினார்கள் எங்களை தேசவிரோதிகளாக முத்திரை குத்துவதா? எங்கள் விசுவாசத்துக்கான பரிசா இது?
சுயாட்சியை தாருங்கள்
நாங்கள் இந்தியாவை மனதார நேசித்து ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களுடைய அன்பையும் நேசத்தையும் இந்தியா புரிந்து கொள்ளவே இல்லையே. ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் இதயங்களை வெற்றி கொண்டால்தான் அந்த பிராந்திய மக்கள் உங்களை அன்புடன் ஆரத் தழுவிக் கொள்வார்கள். எங்களது இதயங்களை உங்களால் வெல்ல முடியவில்லை எனில் எங்களுடைய சுயாட்சியை எங்களுக்கு கொடுங்கள்.
அமைதி தேவை
ராணுவம் தமது கடமையை செய்வதாக தளபதிகள் கூறுகின்றனர். நீங்கள் எத்தனை பேரைத்தான் கொல்வீர்கள்? நாங்கள் தியாகம் செய்து கொண்டே இருக்க முடியாது. இது அரசியல் பிரச்சனை. இதற்கு தீர்வு காணாமல் அமைதி இங்கே அமைதி நிலவாது.
பயங்கரவாதிகளுக்கு ஊக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவில்லை. உண்மையில் பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தரும் நடவடிக்கையாக அமைந்துவிட்டது.
370-வது பிரிவு தேவை
நாங்கள் தொடர்ந்து சுயாட்சிக்காக குரல் எழுப்புவோம். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புவோம். இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.