370வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக போராட்டம்- பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் கைது
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள் சஃபியா அப்துல்லா கான் மற்றும் சகோதரி சுரையா அப்துல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ந் தேதிக்குப் பின்னர் நேற்றுதான் செல்போன் சேவைகள் மீண்டும் தொடங்கின. 72 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது.
மேலும் சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. தற்போது சுற்றுலா பயணிகளும் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீநகரில் போராட்டம்
இந்நிலையில் இன்று 370வது பிரிவு நீக்கத்தைக் கண்டித்து ஶ்ரீநகரில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. ஶ்ரீநகர் லால் சவுக் அருகே பிரதாப் பூங்காவில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்க
ஜம்மு காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பரூக் பதுல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை விடுதலை செய்யக் கொரும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
பரூக் அப்துல்லா சகோதரி கைது
இதையடுத்து இப்போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா அப்துல்லா, பரூக் அப்துல்லாவின் மகள் அப்துல்லா கான், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பஷீர் அகமது கானின் மனைவி ஹாவா பஷீர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் கல்வியாளர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
|
370 நீக்கத்துக்கு எதிர்ப்பு
அப்போது செய்தியாளர்களிடம் சுரையா அப்துல்லா கூறியதாவது: ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் நாங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டிருந்தோம். அதன்பின்னர் 370-வது பிரிவை நீக்கியிருக்கிறார். இது ஒரு கட்டாய திருமணம் போன்றது. எந்த ஒரு பயனையும் தரப்போவது இல்லை என்றார்.