வலுவான லோக்பால் மசோதா: கெஜ்ரிவாலை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லும் ஹசாரே...
ரலேகான் சித்தி: வலுவில்லாத லோக்பால் மசோதாவை ஹசாரே ஏற்றுக் கொண்டது வருத்தம் அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘தனக்கு இந்த லோக்பால் மசோதா திருப்தி அளிப்பதாகவும், இதற்கு முரணாக சிந்திப்பவர்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னும் வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார் அன்னா ஹசாரே.
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் ஹசாரே.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவை அன்னா ஹசாரேவும் ஏற்றுக் கொண்டார். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், ‘இது லோக்பால் அல்ல, ஜோக்பால். இதனை அன்னா ஏற்றுக் கொண்டது வருத்தமளிக்கிறது' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தற்போது, கெஜ்ரிவாலின் லோக்பால் மசோதா குறித்த கருத்தை நிராகரித்து அன்னா ஹசாரே, அதற்குப் பதிலடி தரும் விதமாக கூறியுள்ளதாவது:-
நான் மசோதாவின் ஷரத்துகளை நன்றாக படித்து இருக்கிறேன். இந்த மசோதா ஏதும் குறையுடன் இருப்பதாக கெஜ்ரிவால் நினைத்தால், அதற்காக அவர் உண்ணாவிரதம் இருக்கட்டும். ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து எனக்கு திருப்தியே. இரு சபைகளிலும் முதலில் இதை கொண்டுவரட்டும்.
இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு பிறகு, யாரேனும் வலுவில்லாமல் இருப்பதாக நினைத்தால் அவர்கள் அதற்காக உண்ணாவிரதம் இருக்கட்டும். கெஜ்ரிவாலின் கருத்துக்கு மேலும் பதிலளிக்க நான் விரும்பவில்லை.
நாங்கள் ஏன் வாய்சண்டையிட வேண்டும். இந்த மசோதாவில் சி.பி.ஐ. மீதான அரசின் அதிகாரம் நீக்கப்பட்டு இருக்கிறது. மற்ற 13 விதிகளை நான் வரவேற்று இருக்கிறேன். அதனால், இந்த மசோதா நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.