காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: தனி நீதிமன்றம் அமைக்க முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை
காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிநீதிமன்றம் அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிநீதிமன்றம் அமைத்து விசாரிக்க அம்மாநில ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 8 பேர் கடத்திச் சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமியை வெளியில் விட்ட அவர்கள் சிறுமியின் தலையில் கல்லை போட்டு நசுக்கி கொடூரமாக கொன்றனர். வனப்பகுதியில் கிடந்த சிறுமியின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிதைந்த மண்டை ஓடு
சிறுமியின் உடல் முழுக்க நகக் கீறல்கள் இருந்தன. தலையில் கல்லைப் போட்டதில் மண்டை ஓடு சிதைந்திருந்தது.
நாடு முழுவதும் கொந்தளிப்பு
இந்த கொடூர சம்பவத்தில் பாஜகவினரும் ஆர்எஸ்எஸும் ஈடுபட்டிருந்ததால் சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்நிலையில் சிறுமி பலாத்காரம் மற்றும் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஹைகோர்ட் நீதிபதிக்கு கடிதம்
இதைத்தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்க முதல்வர் மெகபூபா முப்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் ஹைகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
விரைவில் நீதி
அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து, மாநிலத்திலேயே விரைவாக நீதி வழங்கப்பட்ட கோர்ட்டாக அது அமைய வேண்டும் என முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசார் பணிநீக்கம்
மேலும் சிறுமி பலாத்கார விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை பணிநீக்கம் செய்யவும் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.